பிரதமர் மோடியை நேற்றைய தினம் அதிமுகவின் இபிஎஸ் தரப்பு ஆதரவாளர் தம்பித்துரை சந்தித்த நிலையில், இன்றைய தினம் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் ரவீந்திரநாத் நேரடியாக சந்தித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் போட்டியிடுகின்றனர். இபிஎஸ் தரப்பில் கே.எஸ்.தென்னரசு, ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவசரமாக டெல்லியில் அகில இந்திய பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றி எடுத்து கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ஆகியோர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
இந்நிலையில் அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் டெல்லியில் நேரடியாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பானது நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் நிலவும் உச்சக்கட்ட பிரச்னைகள் குறித்து கேட்டறிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேற்றைய தினம் அதிமுகவின் இபிஎஸ் தரப்பு ஆதரவாளர் தம்பித்துரை மற்றும் இன்றைய தினம் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் ரவீந்திரநாத்தை பிரதமர் மோடி சந்தித்து அதிமுகவில் நிலவி வரும் பிரச்னை குறித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







