எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார்.
எதிர்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா டெல்லி விஜய் சவுக் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அரசியலில் அனுபவம் நிறைந்தவர் யஷ்வந்த் சின்ஹா என்பதால் அவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்த ஒருமனதாக அனைத்து எதிர்கட்சிகளும் முடிவெடுத்துள்ளோம். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் நிகழ்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை.

இந்த சூழ்நிலையில் தான் எதிர்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது. தற்போது எதிர்கட்சிகள் தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் சிறந்த வேட்பாளர் ஆவார். குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக தனது முடிவை மாற்றிக் கொள்ளாது. எதிர்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார் திருச்சி சிவா.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜவாதி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை தேர்வு செய்ய இன்று ஆலோசனையில் ஈடுபட்டது.
தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது.
முன்னதாக, கடந்த 15ம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் இந்தக் கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.