டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர். இதற்கிடையில், தம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள தயார் என்று பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்து இருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என்று மத்திய அரசுக்கு வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்தனர்.
2016-ல் ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வென்ற வெண்கலப் பத்தக்கத்தை வென்ற சாக்ஷி மாலிக்கும், டோக்கியோவில் 2020-ல் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவும், உலக சாம்பியன் பட்டம் வென்ற வினேஷ் போகத்தும் தங்களது பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீசப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், இதுவரை வீராங்கனைகளின் குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு பதிலளித்து நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், விளையாட்டு ஆர்வமுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள் அனைவரும் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை மல்யுத்த வீரர்கள் அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா