“அதிமுக என்ற கட்சியே இல்லாமல், பாஜக இரண்டாம் இடத்திற்கு வந்துவிடும்” – அமைச்சர் சிவசங்கர்!

பாஜகவை உள்ளே விடாமல் தடுப்பதே திமுகவின் கடமை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை குறித்த பொது கூட்டம்‌ நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “இந்தியாவினால் இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பல கட்சிகள் இருக்கலாம், இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பல முதல்வர்கள் இருக்கலாம், மோடிக்கு எதிரான கருத்துக்களை பல கட்சிகள் வைக்கலாம், மோடிக்கு எதிரான பல கருத்துக்களை முதல்வர் வைக்கலாம்.

ஆனால் அதற்கு பல்வேறு வேறுபாடுகள் உண்டு. தெலுங்கானாவில் இருப்பவர்களுக்கு எதிரான கருத்துகளை வைக்கிறார் என்றால், அங்கு பாஜக இரண்டாம் இடத்தில் வந்துவிட்டது. கர்நாடகத்திலே காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் போட்டி என்றால் யார் அடுத்த முதல்வர், யார் அடுத்த இடம் பெறுவது என்பது தான். இன்றைக்கு இப்படி ஒவ்வொரு மாநிலத்தையும் கணக்கிட்டு பார்த்தோம் என்றால் பாஜகவுக்கும் அவர்களுக்குமான எதிர்ப்பு என்பது அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு பாத்திரம் இருக்கிறது.

ஆனால் தமிழகத்தில் நமக்கு எதிர் பாஜக அல்ல, இரண்டாம் இடத்தில் அவர்கள் இல்லவே இல்லை, நோட்டாவுக்கு கீழே இருக்கிறார்கள். மூன்று சதவீதம் ஓட்டுக்கு மேல் அவர்களால் பெற முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள் ஆனால் ஏன் பாஜகவை நாம் எதிர்க்கிறோம் என்றால் இங்கு இரண்டாம் இடத்தில் இருக்கின்ற அதிமுகவை கபலிகரம் செய்து, அவர்கள் தோளில் உட்கார்ந்து கொண்டு இங்கே பாஜக உள்ளே நுழைய துடிக்கிறது.

உள்ளே நுழைந்து விட்டால் மொத்த அதிமுகவையும் பாஜகவை போல் அடைக்கலம் புகுந்து கொண்டு அதிமுக என்ற ஒரு கட்சி இல்லாமல், இரண்டாம் இடத்திற்கு பாஜக வந்துவிடலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறது. எனவே அவர்கள் உள்ளே நுழையாமல் தடுக்க வேண்டியது நம்முடைய கடமை என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.