34.4 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

’பொன்னியின் செல்வனை’ ஏன் தொடங்கவில்லை எம்.ஜி.ஆர்?

கல்கியின் பிரமாண்ட ’பொன்னியின் செல்வனை’படமாக்கி முடித்துவிட்டார் மணிரத்னம். கல்கி, அதை தொடராக எழுதிய காலத்தில் இருந்தே அதிகமான வாசகர்களால் படிக்கப்பட்ட நாவல் அது. எடுத்து வாசிக்கத் தொடங்கினால், கீழே வைக்க விடாத சுவாரஸ்யங்களும் திருப்பங்களும் பரபரப்பும் விறுவிறுப்பும் அந்த நாவலின் அதிசயம். அப்படிப்பட்ட நாவலை மணிரத்னம் எப்படி படமாக்கி இருக்கிறார் என்பதைக் காண ஆவலாக இருக்கிறார்கள் ’பொ. செ’வாசகர்கள்.

அந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் ரெடியாகிவிட்டது என்கிறது படக்குழு. ஐந்து மொழிகளில் உருவாக இருப்பதால், டப்பிங் வேலைகள் பரபரப்பாகப் போய் கொண்டிருக்கின்றன. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், பார்த்திபன் என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம். இவ்வளவு பேரையும் சரியாக மேனேஜ் பண்ணுவதற்குள்ளேயே போதும் போதும் என்றாகிவிடும். மற்ற இயக்குநர்களாக இருந்தால் ஈகோ பஞ்சாயத்து, பிரச்னை என சிக்கலாகி இருக்கும். ஆனால், இயக்குபவர் மணிரத்னமாயிற்றே! அதனால், நினைத்தபடி முடிந்திருக்கிறது வேலை. காலையில் ஐந்து மணிக்கு ஷூட்டிங் என்றால், கண்டிப்பான ஆசிரியரின் முன்னால் நிற்கும் மாணவர்கள் போல, நடிகர், நடிகைகள் 4.50 மணிக்கே ஆஜராகி விடுவார்கள் என்கிறது படக்குழு!

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சில வருடங்களாக, இந்திப் படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த டாப் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இந்தப் படத்தில் ’கொஞ்சம் அதுக்கும் மேல’ லெவலில் வேலை பார்த்திருக்கிறார் என்கிறார்கள். தாய்லாந்து, புதுச்சேரி, ஐதராபாத், ஜெய்ப்பூர் என்று பல்வேறு படமாக்கி இருக்கிறார்கள். பணம் தண்ணீராக செலவாகி இருக்கிறது.

’பொன்னியின் செல்வன்’ கதையை எம்.ஜி.ஆரில் இருந்து பல பேர் படமாக்க நினைத்து, கைவிட்டார்கள் என்பது பழங்கதை. இதன் திரைக்கதை, வசனத்தை எழுதுவதற்குத்தான் இயக்குநர் மகேந்திரனை, எம்.ஜி.ஆர் சென்னைக்கு அழைத்து வந்தார். பிறகு கமல்ஹாசன், அடுத்து தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி (டி.வி.சீரியல்) உட்பட பலர் முயன்றும் முடியாத பிரமாண்டம், இப்போது சாத்தியமாகி இருக்கிறது.

சரியான நபருக்காக, வந்தியத்தேவனும் அருள்மொழி வர்மனும் கரிகாலனும் குந்தவை பிராட்டியும் பூங்குழலியும் பெரிய பழுவேட்டரையரும் காத்திருந்தார்களோ என்னவோ?

’பொன்னியின் செல்வனை’ படமாக்க முயன்ற எம்.ஜி.ஆர், இந்தப் படத்தில் இரண்டு கேரக்டரில் நடிக்க இருந்தார். ஒன்று வந்தியத் தேவன். மற்றொன்று அருள்மொழி வர்மன். இந்தப் படத்துக்கு முன் வைஜயந்திமாலா எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில்தான்
நடித்திருந்தார். அவரை பொ.செ-வில் குந்தவை கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார் எம்.ஜி.ஆர். ஜெமினிகணேசன், பத்மினி, சாவித்ரி, நம்பியார், டி.எஸ்.பாலையா உட்பட பலர் நடிக்க இருந்தனர்.

எம்.ஜி.ஆர் தனது எம்ஜியார் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, இயக்குவதாக இருந்தது முதலில். பிறகு தயாரிப்பு மற்றும் நடிப்பை மட்டும் பார்த்துக் கொண்டு வேறொருவர் இயக்குவற்கு முடிவு செய்யப்பட்டது. அப்போதுதான் ஒரு நாடகத்தில் நடிப்பதற்காக, எம்.ஜி.ஆர் சீர்காழி சென்றுகொண்டிருந்தபோது, சிக்கினார் விபத்தில். 6 மாதம் ஓய்வு தேவை. முடிந்ததும் அவர் நடித்த, நடிக்க இருந்த பல படங்கள் வரிசையாகக் காத்திருக்க, அதில் நடிக்க சென்றுவிட்டார். இதனால் பொன்னியின் செல்வனை அவர் எடுக்க முடியாமல் போனது.

இப்போது, எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த, அந்த வந்தியதேவன் கேரக்டரில்தான் கார்த்தி நடித்திருக்கிறார்!

-ஏக்ஜி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading