கோவாக்சின் சிறந்த செயல்திறனை கொண்டுள்ளது; WHO தலைமை விஞ்ஞானி

கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறந்த செயல்திறனை மூன்றாம் கட்ட பரிசோதனையில் நிருபித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமிய சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மூன்றாம்…

கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறந்த செயல்திறனை மூன்றாம் கட்ட பரிசோதனையில் நிருபித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமிய சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன. இதன்படி கோவாக்சின் தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிரான 77.8% செயல்திறன் கொண்டுள்ளது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதேபோல டெல்லா வேரியன்ட் வைரசுக்கு எதிராக 65.2 சதவிகிதம் செயல்திறன் கொண்டுள்ளது என்றும், கொரோன தொற்று அறிகுறிகளுக்கு எதிராக 93.4 சதவிகிதம் செயல்திறனை கொண்டுள்ளதாகவும் பயோடெக் நிறுவனம் தெரிவித்தது. நாடு முழுவதும் 25 நகரங்களில், 130 கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு வெளிவந்தது. கோவாக்சின் 2ம் தவணை செலுத்தி 2 வாரங்களுக்கு பின்னர் இந்த முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் அறிவித்தது.

இந்தனைத் தொடர்ந்து தற்போது, சௌமியா சுவாமிநாதன் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறந்த செயல்திறனை மூன்றாம் கட்ட பரிசோதனையில் நிருபித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் 60-70 சதவிகித மக்களுக்கு முதற்கட்ட கொரோனா தடுப்பூசி உடனடியாக செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பயன்பாட்டிற்காக கோவாக்சின் காத்திருப்பு பட்டியலில் உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோவாக்சின் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது.

பாரத் பயோடக் நிறுவனமானது ஐசிஎம்ஆர் மற்றும் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.