இந்தியாவில் 78% பள்ளிகளில் இணையவசதி இல்லை – ஆய்வில் தகவல்

ஆன்லைன் கல்வி அத்தியாவசியமானதாக மாறிவரும் நிலையில், இந்தியாவில் 78% பள்ளிகளில் இணையவசதி இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. செல்போன்கள், கணினி, லேப்டாப், டேப்லெட், டிவி, ரேடியோ என பல வழிகளில் பாடங்கள்…

ஆன்லைன் கல்வி அத்தியாவசியமானதாக மாறிவரும் நிலையில், இந்தியாவில் 78% பள்ளிகளில் இணையவசதி இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

செல்போன்கள், கணினி, லேப்டாப், டேப்லெட், டிவி, ரேடியோ என பல வழிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நாட்டில் 78 சதவீதம் பள்ளிகளில் இணையவசதியே இல்லை என மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-2020-ம் கல்வியாண்டின் கணக்கீட்டின் படி, 22 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளதாகவும், அதிலும் 12 சதவீதத்துக்கும் குறைவான அரசுப்பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருப்பதாகவும், மத்திய அரசின் UDISE ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் கணினி வசதி இருப்பதாகவும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான பள்ளிகளில் கணினி வசதி இருப்பதாகவும் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் 20 சதவீதத்துக்கும் குறைவான பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைன் வகுப்புகள் அத்தியாவசியமானதாக மாறியிருப்பதால், பள்ளிக்கல்வியில் கணினி மற்றும் இணையதளத்தின் பயன்பாடை ஒவ்வொரு மாநில அரசும் மேம்படுத்தி உறுதி செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அங்கன்வாடியில் இருந்தே இணையவசதியை கட்டாயமாக்க வேண்டும் என்றும், விடுபட்ட பாடங்களையும் ஆன்லைனில் கற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், ஆசிரியர்கள் தங்கள் பாடங்களை தினந்தோறும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஏதுவாக பிரத்யேக தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.