இந்தி திணிப்பு தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி வைரலாகி வருகிறது.
இந்தி திணிப்பு எதிர்ப்பு தொடர்பாக அரசினர் தீர்மானம் ஒன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திக்கு தாய்ப்பாலும், மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் கொடுப்பதா என்று மத்திய அரசைச் சாடினார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அலுவல் மொழி தொடர்பான அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும் அந்த மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசினை பேரவை வலியுறுத்துவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து அளித்து வலியுறுத்தவும் திமுக திட்டமிட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பாக “What’s in a மொழி?” என்று இந்தியா டுடே செய்தி வாசிப்பாளர் அக்ஷிதா நந்தகோபால் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ பதிவில் , ஆங்கிலச் செய்தி வாசிப்பாளரான அக்ஷிதா, வணக்கம், நீங்கள் பார்க்கிறீர்கள் 6PM Prime நான் அக்ஷிதா நந்தகோபால். இன்றைக்கு நாம் விவாதிக்கப்போவது இந்தி மொழி திணிப்பு பற்றித் தான் என்று கூறிய, நீங்கள் தமிழராக இருந்தால் நான் தமிழில் பேசியது புரிந்திருக்கும் என்றும், இல்லை என்றால் நான் தமிழில் கூறியது புரிந்திருக்காது என்றும் கூறுகிறார். அதே நேரத்தில் உங்கள் மீது இந்த மொழி திணிக்கப்பட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?இதன் காரணமாகவே சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் விளக்கி விவாதத்தை தொடங்குகிறார்.
What’s in a மொழி?
— Akshita Nandagopal (@Akshita_N) October 18, 2022
17 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். சுமார் 5 ஆயிரம் பேர் ரீடிவீட் செய்துள்ளதோடு சுமார் 400 பேர் அதில் கருத்திட்டுள்ளனர். தங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பு என்றும் டமில்நாடு என்று சொல்பவர்களுக்கு மத்தியில் தமிழ்நாடு என்று அழுத்தம் திருத்தமாக உச்சரித்திருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கரூர் ரயில் நிலையத்தில் இந்தியில் எழுதப்பட்டிருப்பதையும், லக்னோவில் ஏன் அப்படி எழுதவில்லை என்றும் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்திக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, 8வது அட்டவணையில் இருக்கும் மற்ற மொழிகளுக்கு மத்திய அரசு அளிப்பதில்லை என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
மொழிப் பிரச்னையை தேசிய ஊடகத்தில் கொண்டு சென்று கவனத்தை ஈர்த்ததற்கு நன்றி என்றும், வாழ்க தமிழ் என்றும் ஏராளமானோர் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த வீடியோ விவாதப் பொருளாக மாறி, பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. இந்தியா டுடே ஆங்கில தொலைக்காட்சியில் தற்போது துணை ஆசிரியராக இருக்கும் அக்ஷிதா நந்தகோபால், அதில் நெறியாளராகவும் பணியாற்றி வருகிறார். சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டைச் சேர்ந்த அக்ஷிதா நந்தகோபால், சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
– வெற்றிநிலா