பொன்னமராவதி அருகே திருநங்கையிடம் அத்துமீறிய நபரை திருநங்கைகள் ஒன்றுகூடி மரண அடி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர், துடியலூர் பகுதியில் உள்ள ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில், தான் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டதாக படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக மருத்துவர்கள் துடியலூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் தர்மலிங்கத்திடம் விசாரித்தனர். அதில் தர்மலிங்கம் முன்னுக்கு பின் முரணாக பதலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அதில் தர்மலிங்கம் மற்றும் உடன் வேலை செய்யும் நபர் இருவரும் கவுண்டம்பாளையம் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த திருநங்கைகளான ரேஸ்மிகாவிடம் இச்சைக்காக சென்றுள்ளனர்.
அதில் தர்மலிங்கம் மூர்க்கதனமாக அத்துமீறலில் ஈடுபட்டதால் ( அறுவை சிகிச்சை செய்த மார்பிலிருந்து இரத்தம் வந்துள்ளது) ரேஸ்மிகா கத்தி கூச்சலிட அருகில் இருந்த திருநங்கைகள் ஒன்றிணைந்து இருவரையும் தாக்கினர். இதில் உடனிருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட, திருநங்கைகளின் தாக்குதலில் படுகாயமடைந்த தர்மலிங்கம் அங்கிருந்து கிளம்பி கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். திருநங்கைகளிடம் அடிவாங்கியதை வெளியில் சொன்னால் அவமானம் எனகருதிய தர்மலிங்கம், இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து விட்டதாக கூற சந்தேகத்தில் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மை அம்பலமானது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய துடியலூர் போலீசார் , இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருநங்கைகள் ரேஸ்மிகா, மம்தா, கௌதமி, ரூபி, ஹர்னிகா ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவான கீரத்தி என்ற திருநங்கையை போலீசார் தேடி வருகின்றனர்.








