குற்றாலத்தில் சீசன் இந்த ஆண்டு, மே மாத கடைசி வாரத்திலேயே தொடங்கிவிடும் எனத் தெரிகிறது. இதனால் கோடை விடுமுறைக்கு எங்கு செல்லலாம் என யோசித்த கொண்டிருப்பவர்களுக்கு ஒரு ஜாக்பாட் என்றே கூறலாம்.
ஆர்பரிக்கும் அருவிகளை தன்னகத்தே கொண்டுள்ள குற்றாலத்தில் குளிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து படையெடுப்பது வழக்கம். பொதுவாக ஜூன் மாதம் 15ஆம் தேதிக்கு பிறகே குற்றாலத்தில் சீசன் களைகட்டுவது வழக்கம். இந்தாண்டு அதற்கு மாற்றாக, முன்னதாகவே சீசன் தொடங்குவதற்கான அறிகுறிகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தெரிய தொடங்கிவிட்டது. அச்சன்கோயில் அருகே இப்போதே சாரல் மழை களை கட்டுகிறது. எனவே மே மாத இறுதி வாரத்திலேயே சீசன் களைகட்டும் எனத்தெரிகிறது. குற்றால சீசன் எதிரொலியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பேய் காற்று வீசுகிறது. குற்றால சீசன் அறிகுறி தெரிவதால், வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இங்குள்ள அருவிகளில் குளித்தால் மன அழுத்தம், உடல் வலிகள் நீங்கும் என கூறப்படுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஆண்டுதோறும் குளித்து மகிழ லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கொரோனா தடை ஊரடங்கு தளர்வில் அவ்வப்போது சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்தாலும், தொற்று பரவல் காரணமாக மீண்டும் தடை விதிக்கப்பட்டது. பல அருவிகளில் நீர் நிலைகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டாலும் குற்றாலத்தில் குளிக்க தடை தொடர்ந்தது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதான அருவியான குற்றால மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் ஒரே நேரத்தில் 10 பேர், பெண்கள் பகுதியில் ஒரு நேரத்தில் 6 பேர் என கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தலா 10 பேர், பழைய குற்றாலம் அருவியில் ஆண்கள் பகுதியில் 5 பேர், பெண்கள் பகுதியில் 10 பேரை அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி சான்றிதழ் அவசியம் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து நிற்க வரையப்பட்ட வட்டங்களில் நின்று செல்லவேண்டும், அருவிப் பகுதிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் இருத்தல் வேண்டும் என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.அந்த கட்டுப்பாட்டுடன் மீண்டும் குற்றால அருவிகள் களைகட்டுமே என்றே தெரிகிறது.