மதுரை காமராஜர் சாலையில் அமமுகவின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய டிடிவி தினகரன்,
”அரசியல்ரீதியாக எது நடந்தாலும், அமமுக மற்றும், டி.டி.வி தினகரனுடன் தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். செங்கோட்டையன், நான் தூண்டி விட்டு தவெக சென்தாக கூறினார்கள். இதுபோல், ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முடிவையும் என்னுடன் தொடர்பு படுத்தி வதந்தியை பரப்பி வருகிறார்கள்.
அமமுக எப்போது முடிவு எடுக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். தகுதியான வேட்பாளர்களுக்கு, போட்டியிட வாய்ப்பு அளிக்கும் கூட்டணிக்கு செல்ல இருக்கிறோம். தேர்தல் அறிவிப்பதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன்பாக கூட்டணி குறித்து அறிவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் வர வேண்டும் என அண்ணாமலை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். அது குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்கள் தொண்டர்கள், நிர்வாகிகள், வாக்கு வங்கி ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் கூட்டணியை உறுதியாக அமைப்போம்.
யாரையும் அழுத்தம் கொடுத்து கூட்டணியை ஏற்படுத்த முடியாது. நட்பு ரீதியாக, மரியாதை நிமித்தமாக டெல்லி செல்வதை எல்லாம் விமர்சிக்கிறார்கள். செப்டம்பர் 3-ந்தேதிக்கு பின்னர் நான் கூட்டணியை விட்டு வெளி வந்த பின்னர் யாரையும் நான் சந்திக்கவில்லை. எனக்கு யாரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.
நான், தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை இன்னும் முடிவு செல்லவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழக மக்கள் அவர்களுக்கு விரோதமாக வாக்களிப்பார்கள்” என்றார்







