தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களால் இந்து சமயம் பின்பற்றப்படுகிறது. இந்து சமய திருகோயில்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக அமைந்துள்ளன. இந்த திருக்கோயில்களின் நிர்வாகத்தை முறையாகப் பராமரித்தல், பாதுகாத்தல், மேற்பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் திருக்கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன என்பது குறித்தான அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், மண்டல இணை ஆணையர்கள் திருக்கோயில்கள் கீழ்க்காணும் கேள்விகளுக்கு ஏற்ப விவரங்களை சேகரித்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. சைவக் கோயிலா அல்லது வைணவக் கோயிலா ?
2. கோயில் எத்தனை ஆண்டுகள் பழமையானது ? வரலாற்றுக்கு முற்பட்டதா ? பிற்பட்டதா ?
3. கோயிலில் கருவறை உட்பட எத்தனை சந்நிதிகள் உள்ளன ? மூலவர் எத்திசை நோக்கி
இருக்கிறார் ?
4. கோயில் கட்டுமானம் எந்த ஆகமத்தைச் சேர்ந்தது ? எந்த ஆகமத்தையும் சாராத
பக்தி கோயிலா ?
5. கோயில் பூசாரிகள் முறையாக ஆகமப்படி மேற்கொண்டவரா ?
6. கோயில் வடகலையைச் சார்ந்ததா ? தென்கலையைச் சார்ந்ததா ?
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும், இந்த விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் அனுப்ப, மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.







