பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி – ரசிகர்கள் கொண்டாட்டம்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் அடித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 32 ரன்னும், ஷிவம் துபே 27 ரன்னும் எடுத்தனர்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்தியா அசத்தலாக பந்து வீசியது. உஸ்மான் கான் ஒரளவு தாக்குப் பிடித்து 44 ரன்கள் எடுத்தார். இறுதியில், பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பும்ரா, பாண்ட்யா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது இஷான் கிஷனுக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை நாடு முழுவதிலும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.