“ஊழலுக்கு பெயர் போன இயக்கம் திமுக மட்டுமே” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மணல் திருட்டுக்கு உதவிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசியவர், “கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிய அரசு அதிமுக. ஆனால் திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. மும்முனை மின்சாரம் கூட ஷிப்ட் முறையில் தான் வழங்குகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு முதல்வர் நாட்டிற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும், ஆனால் இவர் எப்படி இருக்கிறார் என்பது மக்களுக்கே தெரியும்.

கடந்த தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டன உயர்வு அதே போல சொத்துவரி உயர்வு, மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. கொரோனோ காலத்திலும் மக்களுக்கு உதவிய அரசு அதிமுக அரசு. குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் ரேஷன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கிய அரசு அதிமுக.

ஆனால் திமுக ஆட்சியில் வரி வருவாய் உயர்ந்தும் கூட மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருக்கிறது. தமிழக துணை முதல்வர் உதயநிதி இரவில் ஆட்டம் பகலில் தூக்கம் என்கிற நிலையில் தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். திமுக ஆட்சியில் வரலாறு பேசும் என்று கூறுகின்றனர். திமுக ஆட்சியில் 10 லட்சம் கோடி கடனாக உள்ளது. இந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடனை ஏற்படுத்தி உள்ளார். கடனை பற்றி தான் வரலாறு பேசும். ஊழலுக்கு பெயர் போன இயக்கம் திமுக மட்டுமே.

மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து உள்ளது. சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கரூரில் திமுகவினர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தெரிந்தே நடக்கிறது. மணல் திருட்டுக்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் உறுதுணையாக உள்ளனர்.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மணல் திருட்டுக்கு உதவிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யார் நினைத்தாலும் 100 நாள் வேலை திட்டத்தினை நிறுத்த முடியாது. தற்போது 125 நாட்களாக உயர்த்தி கொடுத்த உள்ளோம். அதிமுக ஆட்சியில் அமைந்தவுடன் 150 நாட்களாக மாற்றப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வை கூட சரியாக நடத்த முடியாத அரசு திமுக தான். இப்பகுதிக்கு அத்திக்கடவு அவிநாசி திட்டம் கொண்டு வந்தது அதிமுக. குடிமராமத்து திட்டம் கொண்டு வந்து அனைத்து குளம் குட்டைகளுக்கும் தண்ணீர் கொண்டு வந்தது அதிமுக தான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.