மண்ணை, மொழியை, மக்களைக் காக்க, இன்று போல் என்றும் களத்தில் நிற்போம் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று சூழலிலும் 72 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்திருப்பது, ஜனநாயகத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார். நூறு சதவிகித பங்கேற்பே ஜனநாயகம் சென்று சேர வேண்டிய இடம் என்று கூறியுள்ள கமல்ஹாசன், இந்த தேர்தலில், தன்னோடு கைகோர்த்து களம் கண்ட மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள், தோழமைக் கட்சியினர், சக போட்டியாளர்கள் உள்ளோட்டோருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
மக்களின் அன்பை விட மகத்தான பலம் வேறு இல்லை என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், தமிழகத்தைச் சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் முழக்கமல்ல என்றும் அது ஒரு கூட்டுக் கனவு என்றும் தெரிவித்துள்ளார். அதை நோக்கிய பயணத்தில் இருந்து சிறிதும் விலகப் போவதில்லை என்று கூறியுள்ள கமல்ஹாசன், மண்ணை, மொழியை, மக்களைக் காக்க, இன்று போல் என்றும் களத்தில் நிற்போம் என்று தெரிவித்துள்ளார்.







