“நிதிநிலையை உயர்த்துவோருக்கு வாக்கு அளியுங்கள்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் நிதி நிலையை யார் உயர்த்துகிறார்களோ அவர்களுக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  ஜூன்…

தமிழ்நாட்டின் நிதி நிலையை யார் உயர்த்துகிறார்களோ அவர்களுக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  ஜூன் 4-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இந்நிலையில்,  நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள் : ‘வடக்கன்’ திரைப்படம் மே மாதம் வெளியீடு – படக்குழு அறிவிப்பு!

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

“தூத்துக்குடி தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கனிமொழியை 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தீர்கள். அதைபோல்,  இந்த முறை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.  தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் அதிகபடியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி தூத்துக்குடி தொகுதியாகதான் இருக்க வேண்டும்.

I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவைகளின் விலை குறைக்கப்படும்.  முதலமைச்சரின்  திட்டங்களில் சிறப்பான திட்டமாக நாடே போற்றும் திட்டமான காலை உணவு திட்டம் மற்றும் மகளிர் உரிமை திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் போன்றவை மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை.  ஆனால், நமது முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

மழை வெள்ள பாதிப்பிற்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்,  உப்பள தொழிலாலர்களுக்கு மழைக்கால நிவாரணம், மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால கூடுதல் தொகை ஆகியவற்றை பெற்று தந்தவர் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி . அந்த உரிமையில் உங்களிடம் வாக்குகளை கேட்கின்றோம்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் ஆறுதல் கூட தெரிவிக்க வராத பிரதமர் மோடி தேர்தல் வந்தவுடன் தமிழ்நாட்டிற்கு அடிகடி வருகிறார்.  தமிழ்நாடு மக்களை யார் மதிக்கின்றார்களோ,  தமிழ்நாட்டின் நிதி நிலையை யார் உயர்த்துகிறார்களோ அவர்களுக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும்.  தமிழ்நாட்டில் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டும்”

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.