விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு மாடுகள் கிழே விழுந்த கிடந்த மின்சார கம்பிகளை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ரிசர்வ்லைன் திருப்பதி நகரைச் சேர்ந்தவர் சிவகணேசன். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். சிவகணேசன் தினமும் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம்போல நேற்று தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அருகிலுள்ள கண்மாயிக்கு அழைத்துச் சென்றார். அப்போது எதிர்பாரத விதமாக கண்மாயில் அறுந்து விழுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பிகளை இரண்டு மாடுகள் மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகின.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சேற்றில் சிக்கி இருந்த மாடுகளை கயிறு கட்டி இழுத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
–வேந்தன்







