விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வுகளை நடத்தி வருகிறார்.அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் பொன்முடி தலைமையில் விக்கிரவாண்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனிருந்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் ஆவணங்களை வாங்கிப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்துவது குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
—-வேந்தன்








