மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் கிராமத்தில் கோயில் மண்டப கேட்டை உடைத்து காட்டு யானை உள்ளே நுழையும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை, புள்ளிமான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் வசிக்கின்றன. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளதால் இங்கு யானைகள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்களால் பாகுபலி என்று அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டம் இப்பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த யானை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைவதும், விவசாய பயிர்களை உண்பதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், நேற்று அதிகாலையில் பாகுபலி யானை தாசம்பாளையம் பெருமாள் கோவில் மண்டபத்தின் முன்பக்க கேட்டை உடைத்து விட்டு தாசம்பாளையம் கிராமத்திற்குள் சென்றது. இந்த காட்சியானது கோயிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சௌம்யா.மோ






