புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபளிக்கிறது. 25 வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. இப்போது மேலும் ஒன்பது ரயில்கள் சேர்க்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை ஆகிய 2 வழித்தடங்கள் என நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே 25-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை – சென்னை இடையிலான முதல் வந்தே பாரத் ரயிலை இன்று காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில், 8 வந்தே பாரத் ரயில் சேவைகளையும் துவக்கி வைத்தார்.
நெல்லையில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வந்தே பாரத் விரைவு ரயிலானது விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் மற்றும் தாம்பரம் ஆகிய 6 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்றும், வாரத்தில் செவ்வாய்கிழமையை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது,
“கடந்த பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ள பல ரயில் நிலையங்கள் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘ஆசாதி கா அம்ரித் கால்’ உருவாக்கப்படும் அனைத்து நிலையங்களும் ‘அம்ரித் பாரத் நிலையங்கள்’ என்று அழைக்கப்படும்.
வேகம், உள்கட்டமைப்பு வளர்ச்சியின் அளவு 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது. இன்று ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநில மக்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வசதியைப் பெறுவார்கள்.
இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை சித்தரிக்கின்றன. 25 வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. இப்போது மேலும் ஒன்பது ரயில்கள் சேர்க்கப்படும். வந்தே பாரத் ரயில்களின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றில் ஏற்கனவே 1,11,00,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர்” இவ்வாறு கூறியுள்ளார்.







