நகை வாங்குவது போல் நடித்து, நகையை வாயில் போட்டு விழுங்கியவரை
கைது செய்த போலீசார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவர்
புதுச்சேரி நகர பகுதியான நெல்லுமண்டி வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த
3-ம் தேதி 25 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் தங்க செயின் வேண்டுமென
கேட்டுள்ளார்.
அப்போது கடையில் பணி புரியும் ஊழியர்கள் சில தங்க செயின்களை
காண்பித்துள்ளனர். அதில் ஒவ்வொன்றாகப் பார்த்து அவர் ஊழியர் திரும்பிய போது
நான்கு கிராம் எடை கொண்ட தங்க சங்கிலியை தனது வாயில் போட்டு விழுங்கி உள்ளார்.
இதனை பார்த்த ஊழியர்கள் அந்த இளைஞரைப் பிடித்து பெரிய கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து பெரியக்கடை போலீசார் நடத்தி விசாரணையில் அந்த வாலிபர் ஒடிசாவை சேர்ந்த ராஜசேகர் சவுத் (25) என்பதும், கூலி தொழிலாளியான இவர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தபோது பணம் செலவானதால், மது அருந்தவும் திரும்பி ஊருக்கு செல்லவும் பணம் தேவைப்பட்டதால் நகைக்கடைக்கு சென்று நகை வாங்குவது போல் நடித்து நகையைத் திருடி உள்ளது தெரியவந்தது.
இதை அடுத்து, ராஜசேகரை அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் சிகிச்சை மூலமாக அவர் விழுங்கிய செயினை வெளியே எடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.







