அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் முடிவடைந்து வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தநிலையில், ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து விட்டன. கட்டுமான பணிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றம் திருப்தி அளிக்கிறது.
அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகிவிடும். 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர சங்கராந்தி நாளில், கோவில் கர்ப்பகிரகத்தில் ராமர் சிலைகள் நிறுவப்படும். அதைத்தொடர்ந்து அதே மாதத்தில், ராமர் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து விடப்படும்.
கோவில் கட்டி முடிப்பதற்கு மொத்தம் ரூ.1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. கோவிலில், பிரபலமான இந்து மடாதிபதிகள் சிலைகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கப்படும் என அவர் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் மக்ரானா மலையில் வெட்டி எடுக்கப்படும் மார்பிள் கற்கள், கோவில் கருவறைக்குள் பயன்படுத்தப்படுகின்றன. 2024-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கு 3 மாதங்களுக்கு முன்பு ராமர் கோவில், பக்தர்களுக்கு திறக்கப்படவுள்ளது.