‘பதிவு செய்யாத முதியோர் இல்லங்களைச் செயல்பட அனுமதிக்கக் கூடாது’

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பதிவு செய்யாத முதியோர் இல்லங்களைச் செயல்பட அனுமதிக்கக் கூடாது என…

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பதிவு செய்யாத முதியோர் இல்லங்களைச் செயல்பட அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள முதியோர் இல்லங்களைக் கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்கக் கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, முதியோர் இல்லங்களை ஆய்வு செய்வது, பதவி செய்யப்படாவிட்டால் நடவடிக்கை எடுப்பது, பதிவு செய்வது கட்டாயம் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், அந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை என கிருஷ்ணமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதேபோல, அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அரசாணையை அமல்படுத்தக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, அரசாணை செல்லும் எனக் கூறி, அதில் தலையிட மறுத்து, அரசாணையை எதிர்த்த வழக்குகளையும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும், முடித்துவைத்தது. மேலும், முதியோர் இல்லங்களை முறைப்படுத்திக் கண்காணிப்பது தொடர்பாக அரசு பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளை நீதிபதிகள் வகுத்துள்ளனர். அனைத்து முதியோர் இல்லங்களையும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாணை அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். முதியோர் இல்லங்களில் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய பின்னரும் நிவர்த்தி செய்யாத முதியோர் இல்லங்களின் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மனித எலும்புகள் கண்டெடுப்பு’

மேலும், முதியோர் இல்லங்களில் தங்கி இருப்பவர்கள் மற்றும் நிர்வாகிகளின் விவரங்களைப் பராமரிக்க வேண்டும். மூத்த குடிமக்கள் புகார் அளிக்க ஏதுவாக தனிப்பிரிவைத் தொடங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாகப் பதிவு செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யப்படாதவற்றைச் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பித்த அரசாணை அடிப்படையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.