தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முதற்கட்டத்தில்தான் இருப்பதால் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவதற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து திருவிழா காலங்களில் நெல்லையப்பர் கோயிலில் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தையும், கோயிலில் உள்ள காந்திமதி யானைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள கருமாரி தெப்பம் புனரமைப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி வருகிறது என்றார்.
நெல்லையப்பர் கோயிலில் தல மரம் அமைந்துள்ள இடத்தில் புதிய கல் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், 100 ஆண்டுகளுக்கு பின்னர் நெல்லையப்பர் கோயிலில் மூலிகை தைலம் தயார் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொண்டதாக கூறினார். நெல்லையப்பர் கோயிலில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து 4 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்கள் இன்னும் ஒரு சில தினங்களில் முதலமைச்சரால் தொடங்கப்பட உள்ளது என்றார்.
சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது போன்று நெல்லையப்பர் கோயிலில் திருவிழா காலங்களில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 21 லட்சம் கூடுதல் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேர் வரை அன்னதானம் சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் தேர் உலா வருகின்ற பகுதிகளில் முழுமையாக அறநிலைய துறை சார்ந்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்வாரியம் மூலம் மின்பாதை செல்லும் தேர் உலா வரும் பாதைகளில் உதைவிட மின்தடமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். நெல்லையப்பர் கோயில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள துணை ஆணையாளர் அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் பக்தர்கள் அதிகம் வரும் கோயில்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை பணிகளான கழிப்பறை குடிநீர் வசதிகளை தனியார் நிறுவனம் மூலம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநில கோயில்களை போல திருச்செந்தூர் முருகன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில், திருத்தணி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களின் புதிய பணிகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 300 கோடி ரூபாய் மதிப்பில் திருச்செந்தூர் கோயிலில் செய்யப்பட இருக்கும் மேம்பாட்டு பணிகளுக்கான முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளது. முதலமைச்சர் மூலம் ஆவணி மாதம் அதற்கான பணிகள் தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் 1500 கோயில்களில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை போன்று கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மூன்று கோவில்களில் புதிய தங்கத்தேர் செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் தற்போது முதற்கட்டத்தில் தான் உள்ளது என்ற அவர், இதனால் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவதற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என தெரிவித்தார். தமிழகத்தில் நோய் பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்படாதவாறு முதலமைச்சரின் நடவடிக்கை இருக்கும் என்றும் முகக்கவசம் அணிந்து கோயிலுக்கு பக்தர்கள் வரும் நிலை இருக்காது என நம்புவோம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








