பொதுமக்கள் தொடங்கி, தொழில்துறை சார்ந்தவர்கள் என பல தரப்பினர் மத்தியிலும் மத்திய பட்ஜெட் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 2023-24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்…
2023-24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். அதனால், பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு என்பது மிக அதிகமாகவே இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு வாழ்வாதரத்திற்கான வாய்ப்புகளை வழங்க உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்பினையும் அதிகரிக்க முடியும். இது சாமானிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்திய ரியல் எஸ்டேட் துறை கொரோனா தொற்றுக் காலத்தில் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. வீடு விற்பனை வீழ்ச்சி அடைந்து அதளபாதாளத்தைத் தொட்டது. ஆனால் தற்போது பல்வேறு தளர்வுகள், தள்ளுபடி காரணமாக 2022ம் ஆண்டில் வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், ஆடம்பர வீடுகளின் விற்பனையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தைத் தொட்டது. 2021ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் விற்பனை 50 சதவீதம் அதிகரித்தது. அதனால், ரியல் எஸ்டேட், வீடு கட்டுமான துறைக்கு சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துறைக்கு சலுகைகள் வழங்கினால் இத்துறையில் வளர்ச்சி ஏற்பட்டு, அது சார்ந்த பல துறைகளில் வளர்ச்சி ஏற்படும் , பொருளாதார புழக்கம், வேலை வாய்ப்புகள் பெருகும் என கணிக்கின்றனர். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் அரசு மானியமும் அதிகரிக்கப்பட்டு, வேறு சில சலுகைகளும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவு, எரிபொருள், உரங்களுக்கு வழங்கும் மானியத்தினை குறைக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை நவம்பர் மாத இறுதியிலேயே 59% அதிகரித்துள்ளது̣. இது மூலதன செலவினங்களை குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதன் செலவு கடந்த டிசம்பர் 2022 வரையில் மூன்று லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. வரும் ஆண்டில் உணவு மானியம் சுமார் 2.3 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.
உர மானியம் கடந்த மார்ச் 2022 வரையிலான காலகட்டத்தில் 2.7 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. உரங்களுக்கான மானியம் நடப்பு நிதியாண்டில் 2.2 லட்சம் கோடி ரூபாயாக கணக்கிட்டுளளது. இது பட்ஜெட்டில் 1.05 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது. நடப்பாண்டில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தவிர கச்சா எண்ணெய்க்கான மானியமும் குறைக்கப்படலாம் என தெரிகிறது. இந்தியாவில் மொத்த பட்ஜெட்டில் 8 ல் ஒரு பகுதி செலவிடப்படுகின்றது. இந்த நிதியாண்டில் இந்திய பட்ஜெட்டில் 39.45 லட்சம் கோடி ரூபாயாக அரசு செலவிட திட்டமிட்டுள்ளது. இது தவிர இயற்கை எரிவாயு,மற்ற மூலதனங்கள், சமையல் எரிவாயுக்களுக்கான மானியங்களும் குறைக்கப்படலாம் என தெரிகிறது.
வரிச்சலுகை,வட்டி சலுகை, புதிய மானியங்கள், செலவினங்கள் குறைப்பு என பலவித எதிர்பார்ப்புகள் என்னவாகும் என்பதை ,பிப்ரவரி ஒன்றாம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் தெரியும்.
ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்