ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் கணக்கில் வராத ரூ.32.68 லட்சம் பணத்தை கைப்பற்றி, 3 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆட்சியர் அலுவலக ஆய்வுக்குழு அலுவலர்களுடன் அரசினர் விருந்தினர் மாளிகையில் சோதனை நடத்தினர்.
அப்போது பொதுப்பணித்துறை ( கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு) செயற்பொறியாளரின் ஓய்வறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டறிந்தனா். பின்னா் அதிலிருந்து கணக்கில் வராத ரூ.32,68,570-பணத்தை கைப்பற்றினர்.
இது தொடர்பாக ராமநாதபுரம் பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு) செயற்பொறியாளர் கண்ணன்(59), தொழில்நுட்ப வரைபட அலுவலர் குமரேசன், ஜீப் ஓட்டுநர் முனியசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினா்.
மேலும் கட்டுமானப்பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் வாங்கிய கமிஷன் பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.







