பிரதமர் மோடியுடன் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து சசி தரூர் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லை மற்றும் ஜம்மு-காஷ்மீர் பிரச்னை நிலவி வருகிறது. இதனால் இந்திய நாட்டுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொண்டது பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் சிக்கலான சூழ்நிலை நிலவி வருவதால், அந்நாடுகள் உடனான வர்த்தகமும் பாகிஸ்தானுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் அதன் நிதி நிலை மோசமாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்கா-ரஷ்யா நாடுகளுக்கு இடையே உக்ரைன் விவகாரத்தால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டுக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “அனைத்து நாடுகளுடனும் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் நாட்டின் கொள்கை. ஆகவே இந்திய பிரதமர் மோடியுடன் பிரச்னைகள் குறித்து விவாதித்து சரிசெய்ய விரும்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “போருக்கு பதில் விவாதம் நல்லது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், தொலைக்காட்சி விவாதங்களால் பிரச்னை தீவிரமடையுமே தவிர சரி ஆகாது. தொலைக்காட்சி விவாத தொகுப்பாளர்கள் டி.ஆர்.பி-க்காக மூன்றாம் உலகப் போர் கொண்டு வரும் வல்லமை படைத்தவர்கள்” என தெரிவித்துள்ளார்.