பழங்குடியின இளைஞர் கொலை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 14 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே பழங்குடியின இளைஞர் மது என்பவர் உணவு திருடியதாக குற்றம்சாட்டி, ஒரு கும்பல் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியது. பிறகு அந்த இளைஞரை போலீசாரிடம் அந்த கும்பல் ஒப்படைத்தனர். போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் 16 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படியுங்கள் : மெக்சிகோவில் தலைமறைவாக இருந்த பிரபல டெல்லி ரவுடி கைது!
இந்த வழக்கு மன்னார்காடு சிறப்பு நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதனிடையே 4 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, கைதான 16 பேரில், 14 பேர் குற்றவாளிகள் எனவும், அவர்களுக்கான தண்டனைகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 14 பேரில், 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் அபராதமும் விதித்து மன்னார்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.எம்.ரதிஷ் குமார் இன்று உத்தரவிட்டார். அதேபோல், 14வது குற்றவாளி முனீர் என்பவருக்கு 500 ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.