நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே மின் கம்பிகள் பழுது காரணமாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த அனங்கூர் ரயில் நிலைய பகுதியில் மின் கம்பிகள் பழுதடைந்ததால் மின்சார ரயில்கள் கடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இன்று காலை எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் மற்றும் கோவையில் இருந்து சென்னை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இந்த ரயில் நிலையத்தை கடந்து சென்றது.
அப்போது மின்கம்பி பழுது காரணமாக நடுவழியில் இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ரயில்வே கேட் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு, சேலம், குமாரபாளையம் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதியடைந்தன. அன்றாட பணிகளுக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மின் கம்பிகளை பழுது பார்க்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்று மாலைக்குள் இந்த பணிகள் நிறைவடையும் என ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.







