தென்காசியில் வெள்ள நிவாரண தொகை பெற தவறியவர்களா நீங்கள்! இதோ உங்களுக்கு மேலுமொரு வாய்ப்பு!

தென்காசியில் முதலமைச்சர் அறிவித்த மழை, வெள்ள நிவாரண நிதியை இதுவரை பெற தவறியவர்கள் நாளை (ஜன.3) பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தென்…

தென்காசியில் முதலமைச்சர் அறிவித்த மழை, வெள்ள நிவாரண நிதியை இதுவரை பெற தவறியவர்கள் நாளை (ஜன.3) பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தென் மாவட்டங்கள் அனைத்தும் தனித் தீவாக காட்சியளித்தன. அடிப்படை வசதிகள் இன்றி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் 8 தாலுகாகளுக்கு ரூ.1000 சிறப்பு வெள்ள நிவாரண நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  இந்நிவாரண நிதியை பெற நியாய விலைக்கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு,  இன்று (ஜன.2) மதியம் 4 மணி வரை 91 சதவீதத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் டோக்கன் பெறாத காரணத்தாலோ, டோக்கன் பெற்றும் உரிய நேரத்தில் வர இயலாத காரணத்தாலோ டோக்கன் தவறவிட்டதனாலோ மேற்படி நிவாரண நிதியினை இதுவரை பெறாதவர்கள் கடைசி வாய்ப்பாக கைரேகை வைத்து நிதியுதவி
பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு!

நிவாரண தொகை நாளை (ஜன.3) மாலை 5 மணி வரை மட்டுமே வழங்கப்படும்.
பின்னர் ஜன.4-ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் பொது விநியோகத்திட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.  மேலும் பொங்கல் பண்டிகை வர இருக்கும் காரணத்தால், அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு  அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டியுள்ளது.

எனவே மேலும் கால அவகாசம் நீட்டிக்க வாய்பில்லை என்பதால், நிவாரண நிதி பெறாமல் தவறவிட்டவர்கள் கடைசி நாளான நாளை (ஜன.3) தவறாமல்  நிவாரண தொகையினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்  ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.