நாட்டில் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துத்தான் போட்டியிடும் என்றும், அந்த தேர்தலிலும் 50 சதவீதம் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள், எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் மிகக் குறைவு என குறிப்பிட்ட சீமான், பாஜகவின் மெயின் டீம் திமுக தான் என்றும் விமர்சனம் செய்தார்.
சில்லறை வணிகத்தில், அந்நிய முதலீட்டைக் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி தான் என தெரிவித்த அவர், காங்கிரஸ் மற்றும் பாஜகவை தொடர்ந்து எதிர்ப்போம் என்றார். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தரமான கல்வி அளிக்கப்படும் என்றும், தாய்மொழி தமிழில் பாடங்கள் கற்பிக்கப்படும் என சீமான் உறுதியளித்தார். கல்வித்துறையில் கொரியாவை மிஞ்சி உலகின் முதன்மையான இடத்திற்குத் தமிழகத்தைக் கொண்டு வருவோம்” என சீமான் உறுதி அளித்தார்.







