முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வரும்போது, மொத்தம் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காடையாம்பட்டி சாலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, வெற்றி நடை போடும் தமிழகம் என்ற வார்த்தையை கேட்டாலே, திமுக தலைவர் ஸ்டாலின் நடுங்குகிறார் என்றும், . அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதால், ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார் என்றும் குறிப்பிட்டார். மேலும், பொதுமக்களுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பேன் என்று, 2006-ல் வாக்குறுதி அளித்த திமுக யாருக்கும் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் சாதனை படைத்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், திமுக ஆட்சியில் மின்தட்டுப்பாடு இருந்த காலம் போய், தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது என கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வரும்போது, 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 5 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தருமபுரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவப் படிப்பில் ஏழை மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையை அதிமுக அரசு மாற்றியுள்ளதாகக் கூறினார். 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் இந்த ஆண்டு 435 ஏழை மாணவர்கள் பயன் அடைந்ததாகவும், அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 600ஆக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.







