திருவாரூர் அருகே வேணுகோபால சுவாமி கோயிலில் உள்ள இரண்டு சிலைகள் அமெரிக்காவில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலத்தூரில் வேணுகோபால
சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இருந்த விஷ்ணு, ஸ்ரீதேவி, மற்றும்
பூதேவி ஆகிய மூன்று சிலைகள் திருடப்பட்டதாக கடந்த 2017 ஆம் ஆண்டு
அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரில் விக்ரபாண்டியம் காவல் நிலையத்தில்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்கின் விசாரணையில் விஷ்ணு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய மூன்று சிலைகளும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று சிலைகளும் திருடப்பட்டு, கோயிலில் போலியான சிலைகள் வைக்கப்பட்டிருந்ததால் கோயிலில் மீதமுள்ள தொன்மையான சிலைகளான யோகநரசிம்மர், விநாயகர், நடனமாடும் கிருஷ்ணர், சோமஸ்கந்தர், நின்ற வடிவிலான விஷ்ணு, நடன சம்பந்தர் ஆகிய ஆறு சிலைகளும் பாதுகாப்பாக திருவாரூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் உள்ள ஐகான் சென்ட்ரில் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், திருடப்பட்ட முந்தைய மூன்று சிலைகளைப் போல இந்த சிலைகளையும் போலியாக நிறுவப்பட்டு உண்மையான சிலைகள் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. அதனடிப்படையில் ஐகான் சென்ட்ரலில் இருந்த சிலைகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவைகள் அனைத்தும் போலியான சிலைகள் என்ற அதிர்ச்சிகர தகவல் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, கோயிலில் இருந்த ஒன்பது சிலைகளும் திருடப்பட்டு போலி சிலைகள் நிறுவப்பட்டது விசாரணையில் தெரியவந்ததால் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று
சிலைகளைப் போன்றே மீதமுள்ள சிலைகளும் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டிருக்கலாம்
என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாண்டிச்சேரியில் உள்ள இந்தோ – பிரெஞ்சு
கலாச்சார மையத்தின் ஆவணங்களின் அடிப்படையில் சிலைகளைத் தேடத்தொடங்கினர்.
அதன்படி ஆறு சிலைகளில் யோகநரசிம்மர், விநாயகர் ஆகிய இரண்டு சிலைகளும்
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் கன்சாஸ் நகரில் உள்ள அருங்காட்சியகம்
ஒன்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சிலைகளையும்
மீட்பதற்கான நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இறங்கியுள்ளனர்.