சிவகாசி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை டெல்லியில் அனுமதிக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் கடந்த அக்டோபர் மாதம் 13-ம் தேதி எழுதியிருந்த கடிதத்தை நினைவு கூர்ந்துள்ளார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பண்டிகை காலங்களில் இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பண்டிகைக் கால கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்படும் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டிற்குப் பங்களிக்கும் காரணிகளாக வாகனங்கள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் இருக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஒருசில நாட்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகளால் மிகக்குறைந்த அளவிலான மாசு ஏற்படும் என்பதால், பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தினைக் கருத்தில்கொண்டு, உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் அறிவியல் முறைப்படி உருவாக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
வேறு எந்த மாநிலமும் பட்டாசுக்கு முழுமையாகத் தடை விதிக்காதபோது, டெல்லியில் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனை நீக்குவதன் மூலமாக, தமிழ்நாட்டில், சிவகாசியைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலை நம்பியிருக்கும் கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிட இயலும் எனக் குறிப்பிட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை டெல்லியில் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.