திருப்பூரில் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில், இது தொடர்பாக அமைச்சர் சாமிநாதன் ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்து நியூஸ் 7 தமிழ், திக்குமுக்காடும் திருப்பூர் என்ற தலைப்பில் கள ஆய்வை மேற்கொண்டது. அப்போது, இடுவம்பாளையம் முதல் சுண்டமேடு வரை சேதமுற்று கிடந்த சாலையால் வாகன விபத்துகள் ஏற்படுவது குறித்து செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, இடுவம்பாளையம் முதல் சுண்டமேடு வரையிலான மூன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நியூஸ் 7 தமிழ் களஆய்வு எதிரொலியாக, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கால தாமதமின்றி ஒப்பந்ததாரர்கள் முடிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.








