திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மளிகைகடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. நோய்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலுள்ள கடைகளை ஐந்து நாட்களுக்கு மூட நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுண் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார்(51).இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். ரவிக்குமாருக்கு கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொந்தரவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது நிலைமை மோசமானதால் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது உடலை பரிசோதனை செய்ததில் அவருக்கு H1N1 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது அவர் வசித்து வந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் நடத்தி வந்த மளிகை கடை மற்றும் அப்பகுதியிலுள்ள கடைகளை ஐந்து நாட்களுக்கு மூட நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், அப் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
வேந்தன்




