பெரிய சூரியூரில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 17 காளைகளை அடக்கிய பூபாலன் முதலிடம் பிடித்தார். அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி பெரிய சூரியூரில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 314 வீரர்கள் கலந்து கொண்டனர். 610 காளைகளும் களம் கண்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் போட்டிகளை துவக்கி வைத்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை கொம்பன், களத்தில் வீரர்களிடம் பிடிபடாமல் நின்று விளையாடியது.
போட்டியின் இறுதியில் 17 காளைகளை அடக்கிய பெரிய சூரியூரைச் சேர்ந்த பூபாலன் முதலிடம் பிடித்தார். அவருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கினார். 14 காளைகளை அடக்கிய ரஞ்சித்திற்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. களத்தில் நின்று விளையாடிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு, சிறந்த காளைக்கான பரிசு வழங்கப்பட்டது.