வடபழனியில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை” முன்னிட்டு சென்னை வடபழனியில் தென் சென்னை மாவட்டம் சார்பில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக் கூட்டம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சென்னையை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் நூற்றுகணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை புள்ளி விவரங்களுடன் மேடையில் காண்பித்து எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்வில் மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 32 ஆண்டு காலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்த கட்சி அதிமுக. கல்வியில் சிறக்கும் மாநிலம் தான் வளர்ச்சி அடையும். அத்தகைய தரமான கல்வி கிடைக்க தமிழகத்தில் அதிகமான கல்லூரிகளை திறந்தவர் எம்.ஜி.ஆர். அதனைத் தொடர்ந்து புரட்சி தலைவி ஜெயலலிதா கல்விக்கு அதிகம் நிதி ஒதுக்கி கல்வித்துறையில் செய்த புரட்சியின் காரணமாக தமிழகம் கல்வித்துறையில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை அடைந்தது.
நான் முதல்வராக இருந்த போது 7 சட்டக்கல்லூரிகள், 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தேன் ஆனால் திமுக அரசு 15 மாதம் ஆகியும் ஒரு கல்லூரியையும் கொண்டு வரவில்லை. எம்.ஜி.ஆர்.அதிமுகவை தோற்றுவிக்கும் போது அண்ணாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது பெயரிலேயே அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். அண்ணா பெயரில் இயங்கு வரும் ஒரே கட்சி அதிமுக தான் .
நாள் தோறும் 63 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு அளித்தவர் எம்.ஜி.ஆர். மலிவு விலையில் உணவு கிடைக்கும் வகையில் அம்மா உணவகத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அம்மா உணவக்கத்தை தற்போதைய அரசு மூட நினைத்தால் அதற்கான பதிலடியை மக்கள் தேர்தலில் கொடுப்பார்கள். மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழும் தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா ஆகிய மூவரும் தான்.
மாணவர்களுக்கு விஞ்ஞான ரீதியில் அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்க அதிமுக ஆட்சியில் மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அறிவுப்பூர்வமான கல்வி கிடைத்தால் ஓட்டு கிடைக்காது என்ற ஒரே காரணத்துக்காக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்தி உள்ளது. கொரோனாவுக்கு பிறகு மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருமானம் ஈட்டி வந்த சூழ்நிலையில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் ஆகியவற்றை திமுக அரசு உயர்த்தி உள்ளது.
அதிமுகவில் தொண்டன் தான் தலைவர். இந்துகளை பற்றி சொல்லக்கூடாத வார்த்தையை கீழ்தரமான வார்த்தை சொல்லி இருக்கிறார் ஆ.ராசா. அவர் சொன்ன வார்த்தை திமுக தலைவர் குடும்பத்திற்கும் பொருந்துமா ? என்று நான் கேட்கவில்லை மக்கள் கேட்கிறார்கள். 15 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பலன் வேதனையும் துன்பமும் தான். உழைப்பாளியை கேட்டால் தான் AM, PM என்றால் என்னவென்று தெரியும். வாக்கிங் போவது, சைக்கிளிங் போவது டீ குடிப்பதை மட்டும் தான் தமிழக முதலமைச்சரின் மினிட் டு மினிட் வேலை.
அதிமுகவின் தொண்டர்களை கூட தற்போதைய முதல்வர் ஸ்டாலினால் தொட முடியாது. திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி,ஸ்டாலின் குடும்பம் தான் இயக்குனர்கள் நிர்வாகிகள் பங்குதாரர்கள். திமுக அரசு வரவு, செலவை மட்டும் தான் செய்கிறது.மக்கள் நலனில் அக்கறையில்லை. போராட்டத்திற்கு அதிகம் அனுமதி கொடுத்த கட்சி அதிமுக. ஆனால் திமுக அரசு ஒரு போராட்டத்திற்கும் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். எதிர்கட்சிகளை திமுக அரசு நசுக்க பார்க்கிறது. ஆனால் ஸ்டாலினின் தந்தையாலேயே ஒடுக்க முடியவில்லை, ஒரு காலமும் அதிமுகவை ஒடுக்க முடியாது.
நான் தற்காலிக தலைவரா,? ஸ்டாலின் தான் தற்காலிக தலைவராக இருந்தார். கட்சியில் தலைவர் பதவி கொடுக்க ஸ்டாலினின் தந்தையே ஸ்டாலினை நம்பவில்லை. அதனால் தான் கருணாநிதி உயிரோடு இருந்த போது செயல் தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்தார். அப்பாவின் உழைப்பால் தான் ஸ்டாலின் முதலமைச்சர், கட்சி தலைவர் ஆகியுள்ளார்.
நிறைய பேர் சொல்கிறார்கள் ஒன்று சேர்த்து விடுவோம் , ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று அது நிச்சயம் நடைபெறாது. இனி அதிமுகவிற்கு தொண்டன் தான் தலைவன் இதில் எந்த மாற்றமும் இல்லை.கொள்ளை அடிப்பதற்கு கட்சி அல்ல நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கே மட்டுமே கட்சி என அவர் பேசினார்.
– பரசுராமன்.ப