”இதே டெல்டாகாரர் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்” – இபிஎஸ் விமர்சனம்

நானும் டெல்டாகாரன் தான்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, ‘இதே டெல்டாகாரர்தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக…

நானும் டெல்டாகாரன் தான்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, ‘இதே டெல்டாகாரர்தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை தஞ்சாவூர், அரியலூர், கடலூர் ஆகிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி. ராஜா, கோ.வி.செழியன், விஜயபாஸ்கர், ஜவாஹிருல்லா, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார். அமைச்சரின் விளக்கத்திற்குப் பின் இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நானும் டெல்டாகாரன் தான். டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதி வழங்காது” என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : ”நானும் டெல்டாக்காரன் தான்” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

இதனை விமர்சித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் டெல்டாகாரர் தான். இதே டெல்டாகாரர் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது.  திமுக அரசு முன் கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் தவற விட்டுவிட்டது. நிலக்கரி எடுப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு, திமுக அரசு தான் முழுக்க முழுக்க காரணம்.

நான் முதலமைச்சராக இருந்த போது, அடிக்கடி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன் என்று மு.க.ஸ்டாலின் என்னை விமர்சனம் செய்வார். இன்று அவரும் கடிதம் தான் எழுதிக் கொண்டே இருக்கிறார். நிலக்கரி விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதுவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதெல்லாம் ஒரு கண்துடைப்பு. சட்டசபையில் பேசி பிரயோஜனம் இல்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். இங்கு பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. இப்படிப்பட்ட ஒரு நிலை வரக்கூடாது என்று தான், நாங்கள் அதை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். அதைக் கூட திமுக அரசால் பாதுகாக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.