திருவாரூர் அருகே பள்ளி வேன் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தைச்
சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ஆனந்த் என்பவரது மகன் விக்னேஷ் (20). நாகப்பட்டினம் தனியார் கல்லூரியில் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் சீர்காழி புரம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் மகன் ஜெகநாதன் (19).
இருவரும் இரு சக்கர வாகனத்தில் இன்று காலை கல்லூரிக்குச் சென்றபோது காட்டூர் வளைவில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே
வந்த பள்ளி வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் மாணவர் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அருகில் இருந்தவர்கள் விபத்தில் காயம் அடைந்த மாணவன் விக்னேஷை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளித்த நிலையில் உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரெ. வீரம்மாதேவி







