“தினந்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” பகுதியில் இன்று, திருமூல நாயனார் அருளிய திருமந்திரத்தின் ஒரு பாடலைப் படித்து, அதன் பொருளறிவோம். சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் என்பது பதி, பசு, பாசத்தைக் குறிப்பதாகவும். அது தொடர்பான திருமூலரின் பாடலைப் பார்ப்போம்… 
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு பாசம் நிலாவே. ( திருமந்திரம், 159)
இதன் பொருளாவது, இறைவன் படைப்பிலுள்ள உயிர்கள் எண்ணற்றவை. பாசத்தால் கட்டப்பட்டது உயிர். பாசமானது ஆணவம், கன்மம், மாயை என்கிற மூன்று வகையான மலங்களைக் கொண்டதாகும். இந்த மலங்கள் நீக்கப்பட்டபொழுது பாசத் தளைகள் அறுக்கப்படுகின்றன.

தூய்மையான நிலையில் உயிர்கள் இறைவனைப் பற்றி விடாது நிற்கும். தொன்மையிலுள்ள பதியாகிய இறையும், பசுவாகிய உயிரும், பாசமாகிய தளையும் என்று சொல்லப்படும் மூன்றினுள் இறையின் தொன்மையினை எல்லா நெறியினரும் சொல்லாலும் பொருளாலும் ஐயந்திரிபின்றி மெய்க்காட்சியான் உடன்படுகின்றனர். அப் பதியினைப் போல் பசு பாசமும் தொன்மையே. பதியினைச் சென்று அணுகுந்தன்மையில்லாத உயிரியும் தளையும் பதி அருளால் எழுந்தருளிவரின் பசுத் தன்மையாகிய முனைப்பும் செயலும் மருளலும், இவற்றிற்கு முறையே வாயிலாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் பாசமும் முனைத்து நில்லாது ஒடுங்கும் என்கிறார் திருமூலர்.
-வெற்றிநிலா







