அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் நிம்மதியாக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது மற்றும் கூட்டணி இடப்பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், அதிமுக-பாஜக கூட்டணி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும், ”அதிமுக தலைவர்கள் மீது எந்த ஒரு வருத்தமும் கிடையாது. தனிப்பட்ட முறையில் நான் மிகவும் விரும்பும் தலைவர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக தலைவர்களை மிகுந்த மரியாதையோடு பார்க்கும் கட்சியாக பாரதிய ஜனதா உள்ளது. காலம் வரும் போது அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும்” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், நீட் தேர்வு, காங்கிரஸ் – திமுக கூட்டணியில்தான் கொண்டு வரப்பட்டதாகவும் நீட் விவகாரம் குறித்து அதிமுக ஆட்சியை குறை சொல்வதற்கு திமுகவிற்கு எந்த தகுதியில் இல்லை என்றும் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் நிம்மதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.