முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Instagram News

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… 9-வது திருமணம் செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!

முகநூல் மூலம் பழகி பண்ருட்டி வாலிபரை 9-வதாக திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ். 24 வயதான இவர் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியாக உள்ளார். இவர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த புகாரில், கடந்த ஆண்டு முகநூல் பார்த்துக் கொண்டிருந்த போது, 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் எனது முகநூல் கணக்கில் இணைந்து நான் வேலூர் மாவட்டம் விருதம்பட்டு ஒட்டைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மகாலட்சுமி என்றும், தான் ஒரு அனாதை, உறவினர்கள் யாரும் கிடையாது .

அதன் பிறகு என்னை பிடித்துள்ளதாகவும், நண்பராக பேச வேண்டும் எனக்கூறி இருவரும் செல்போன் எண்ணை பரிமாறி பேசினோம். அப்போது இளம்பெண் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். உடனே நானும், எனது பெற்றோரிடம் கூறி திருமணம் செய்ய சம்மதம் வாங்கி எனக்கும், மகாலட்சுமிக்கும் கடந்த 23.01.2022 அன்று திருவதிகையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடந்தது.அதன்பிறகு 4 மாதம் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென ஒரு நாள், மகாலட்சுமி தனது பள்ளி தோழிக்கு உடல் நிலை சரியில்லை எனவும், சென்னைக்கு சென்று பார்த்து வருவதாகவும் கூறினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தையடுத்து அவர், எனது வீட்டில் இருந்த 6½ பவுன் நகை, ரூ.83 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றவர், மீண்டும் வரவில்லை. உடனே நான், அவரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது சரியாக பதில் கூறாமல் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து அவர் கொடுத்த முகவரியில் விசாரித்த போது, அது தவறான முகவரி என்பதும், அவர் என்னை போன்று பலரை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதும் தெரிய வந்தது. அந்த வகையில் என்னை அவர், 9வதாக திருமணம் செய்துவிட்டு நகை, பணத்துடன் ஓடிவிட்டார். என்னை ஏமாற்றிய மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

புகாரை பெற்ற அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வள்ளி விசாரணை நடத்தி மகாலட்சுமியை தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram