உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு செலுத்த வந்த பெண்ணின் வாக்கு ஏற்கனவே கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் கண்ணீர் மல்க தனது வேதனையை தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் 313
மாமன்ற உறுப்பினர் பதவிகள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் தொடங்கி
நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான ஏற்பாடுகள்
சிறப்பாக செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதிலும் உள்ள 1615
வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வத்தோடு வரிசையில் நின்று வாக்களித்து
வந்தனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி 42 வது வார்டுக்கான வாக்குப்பதிவு
தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் 42 வது வார்டுக்கு உட்பட்ட மதுரை தமிழன் தெரு பகுதியை சேர்ந்த வசந்தி என்பவர் தனது வாக்கை செலுத்த வந்த போது, தேர்தல் அலுவலர்கள் வசந்தியின் வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது என்று தெரிவித்தனர். மேலும் அவரை நீண்ட நேரம் அவரை காக்க வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வசந்தி குழந்தைகளை தூக்கி கொண்டு தனது வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாக கூறி கண்ணீருடன் கூச்சலிட்டார். அப்போது பேசிய அவர், “படிப்பறிவில்லாத எனக்கு இருக்கும் ஒரே உரிமை வாக்கு செலுத்துவதுதான். ஆனால் அதுவும் இப்போது இல்லையாம்” என்று பேசினார்.
இது குறித்து தேர்தல் பணியில் இருந்த அலுவலர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில் சிறிது நேர ஆலோசனைக்கு பின் அவரை டெண்டர் ஓட்டு மூலம் வாக்களிக்க வைத்தனர். இதனால் சமாதானம் அடைந்த வசந்தி, வீட்டுக்கு சென்றார். டெண்டர் ஓட்டு மூலம் ஏற்கனவே வாக்களித்தவர் வாக்கும், தாளில் வாகளித்த நபரின் வாக்கும்
எடுத்துக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி முடிவின் படி செல்லத்தக்க ஒரு வாக்கு
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.