”திமுகவை புறக்கணிப்பதற்கான காலம் வந்துவிட்டது”- அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு ஊழியர்களும் திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர் என்றும் திமுகவை புறக்கணிப்பதற்கான நேரம் காலம் வந்துவிட்டது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர் விக்கிரவாண்டி அங்காளம்மன் கோவில் அருகே அவர் பேசினார். அவர் பேசியது,

”அதிகமாக டாஸ்மாக் விற்பனை நடைபெறும் மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. அது மட்டுமல்லாமல் இங்கு கள்ளச்சாராய விற்பனையும் இருக்கிறது. கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு திமுகவினர் பாதுகாப்பு அளிக்கிறார்கள். ஜாபர் சாதிக் மூவாயிரம் கோடிக்கு போதை பொருள் விற்பனை செய்திருக்கிறார். அவர் திமுகவை சார்ந்தவர். தமிழக காவல் துறையினர் திறமை மிக்க காவலர்கள் உள்ளனர். ஆனால் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

பொய்யான வாக்குறுதியை அளித்தவர்களின் ஆட்சியை அகற்ற வேண்டும். ஒவ்வொரு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர். இந்தியாவில் ஏழு மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இல்லை. திமுகவை புறக்கணிப்பதற்கான நேரம் காலம் வந்துவிட்டது.எல்லோரும் ஒன்றிணைவோம்” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.