வாச்சாத்தி வழக்கு குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மேலும் குற்றவாளிகள் அனைவரும் 6 வாரத்தில் சரணடையவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடிவந்த தர்மபுரி மாவட்டத்தில், அரூர் அருகே உள்ள வாசாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறைகளின் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, வாச்சாத்தி கிராமத்தில் இருந்த இளம் பெண்கள் 18 பேரை அந்த அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அக்கிராமத்தில் வன்முறை வெறியாட்டம் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு 1995ம் ஆண்டு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிபிஐ , இந்திய வனப் பணியை சேர்ந்த 4 அதிகாரிகள் உள்பட 155 வனத்துறையினர், 108 காவல்துறையினர், 6 வருவாய் துறையினர் என 269 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 1996ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கோவை, கிருஷ்ணகிரி நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, இறுதியாக தர்மபுரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்ட 54 பேர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 215 பேரில், 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும், மீதமுள்ளவர்களுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி தீர்ப்பளித்தது.
குறிப்பாக இந்திய வனப்பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோர் முக்கியக் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவற்றை விசாரித்து தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் மேல்முறையீடு வழக்குகளை தள்ளுபடி செய்து, தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அதில் 50 சதவீத தொகையை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்களில் தண்டிக்கப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், வாச்சாத்தி கிராமத்துக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சம்பவம் நடந்த காலத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வன அதிகாரியாக இருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் முதன்மையான குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்ற இந்திய வனப்பணி அதிகாரி (ஐ.எஃப்.எஸ்.) எல்.நாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 வாரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சரணடைய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







