இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றிற்கு எதிரான இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் நடப்பாண்டின் செப்டம்பர் மாதத்திற்குள் கொண்டுவரப்படும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆதார் பூனவல்லா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் சீரம் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனம் இனைந்து தயாரித்துள்ள கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசிகளின் இரண்டாம் கட்ட சோதனைகள் இவ்வாரம் இந்தியாவில் தொடங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
”சமீபகாலமாக ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பரவியுள்ள புதுவகை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் 89 சதவீதம் பேர் கோவோவாக்ஸ் தடுப்பூசிகளால் குணமடைந்துள்ளனர்” என்று பூனவல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து புனே அரசு மருத்துவமனையில் இரண்டாம் கட்டத் தடுப்பூசி சோதனைகள் வியாழனன்று தொடங்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, இங்கிலாந்தில் நடந்த மூன்றாம் கட்ட சோதனையில், கோவோவாக்ஸ் தடுப்பூசி கொரோனாவின் அசல் திரிபுக்கு எதிராக 96 சதவீத செயல்திறனைக் காட்டியுள்ளது. ஆனால் இங்கிலாந்தின் உருமாறிய கொரோனாவிற்கு எதிராக, அதன் செயல்திறன் சதவீதம் 86.3 ஆகவும், தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையிலும், அதன் ஒட்டுமொத்த செயல்திறன் 48.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது.







