“மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம்” – தவெக தலைவர் விஜய்!

மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ‘ப்போர் பாயிண்ட்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இன்று காலை முதலே விழா நடக்கும் இடத்திற்கு தவெக தொண்டர்கள் குவிந்த நிலையில் கியூ.ஆர். அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுள்ள பொதுமக்களுக்கு தவெக தலைவர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் விழாவில் பங்கேற்றுள்ள முக்கியஸ்தர்களுக்கு விஜய் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், “இது ஒரு அன்பான தருணம். அழகான தருணம். அன்பும் கருணையும் தான் அனைத்திருக்கும் அடிப்படை. தமிழ்நாட்டு மண்ணும் தாயன்பு கொண்ட மண். பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடும் மண். வாழ்க்கை முறையும் வழிபாட்டு முறையும் வேறு வேறு என்றாலும் எல்லோரும் ஒன்றுதான். உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும். நம்பிக்கையை மதிக்கக் கற்றுத் தரும். நம்பிக்கை குறித்த பலத்தை பற்றி சொல்ல பைபிளில் ஏராளமான கதைகள் உண்டு.

ஒரு இளைஞருக்கு எதிராக உடன் இருந்தவர்களே கிணற்றில் தள்ளிவிட்ட பின்னரும் மீண்டும் வந்து அரசனாகும் கதை பைபிளில் உள்ளது. தன்னை கிணற்றில் தள்ளிவிட்ட உடன் பிறந்த சகோதரர்களை, அந்த நாட்டு மக்களை அரசன் எப்படி காப்பாற்றினான். அந்த கதை யாரைப் பற்றிய கதை என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

எவ்வளவு பெரிய எதிரிகளையும் நாம் வெல்லலாம் என்ற உறுதியை அந்த கதைகள் நமக்கு கற்று தருகின்றன. மக்களை மானசீகமாக நேசிப்பவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள். சமூக, சமய நல்லிணக்கத்தை காப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம். மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம். கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்; அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைத்து புகழும் எல்லா வல்ல இறைவனுக்கே. நல்லதே நடக்கும். என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.