ராஜபாளையம் அருகே பழைய இருசக்கர வாகனங்கள் மறு விற்பனை செய்யும் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 36 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளத்தை சேர்ந்த பொன்னு பாண்டி மற்றும் பழனி குமார் ஆகிய இருவர் இணைந்து டி என் சி முக்கு ரோடு பகுதியில் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி மறு விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களது நிலையத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்த சந்தானகுமார் என்பவர் பழைய இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். தொடக்கத்தில் இருந்தே அடிக்கடி வாகனம் பழுதாகுவதாக பழனி குமாரிடம் புகார் தெரிவித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் தவணை கட்டிய சந்தான குமார் கடந்த மாதம் தவணை கட்டவில்லை என தெரிகிறது.
மாத தவணையை கட்டக்கோரி பழனி குமார் சந்தானகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு இரு சக்கர வாகனத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் செலவு
அதிகமானதாகவும் தற்போது தவணை கட்ட இயலாது என்று தெரிவித்துள்ளார்.
வாகனப் பழுதை தன்னிடமே சரி செய்து கொள்ளலாம் எனவும் உடனடியாக தவணையை கட்ட வேண்டும் எனவும் பழனி குமார் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் பைனான்ஸ்
அலுவலகத்தில் ஏற்கனவே பணியாற்றிய மதன்குமார் என்பவரை உடன் அழைத்துக் கொண்ட சந்தனகுமார், கடந்த 23ம் தேதி இரவு குடிபோதையில் பழனி குமார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது பழனி குமார் வீட்டின் முன்புறம் இருந்த கண்ணாடி ஜன்னல் உள்ளிட்டவைகளை
தாக்கி உடைத்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட பழனிக்குமார் மற்றும் அவரது மனைவியை
கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து இருவரும் தப்பி சென்று விட்டனர்.
இச்சம்பவம் குறித்து அன்று இரவு ஆலங்குளம் காவல் நிலையத்தில் பழனி குமார் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நள்ளிரவில் பழனிகுமார் அலுவலகத்தில் இருந்த 36 இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் சந்தனகுமார் மற்றும் மதன் குமார் ஆகிய இருவர் மீதும் பழனி குமார் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இருவரும் இணைந்து இரு சக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.
—-ரெ.வீரம்மாதேவி
இருசக்கர வாகனங்கள் மறுவிற்பனை நிலையத்தில் தீ விபத்து: 2 பேர் கைது!
ராஜபாளையம் அருகே பழைய இருசக்கர வாகனங்கள் மறு விற்பனை செய்யும் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 36 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபாளையம் அருகே…






