போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி – துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறையினர்

சென்னையில் அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சூர்யாவை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். சென்னை அயனாவரத்தில் கடந்த 20ம் தேதி காவல் உதவி ஆய்வாளர் சங்கர், சக காவலர்களுடன் இணைந்து வாகன தணிக்கையில்…

சென்னையில் அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சூர்யாவை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

சென்னை அயனாவரத்தில் கடந்த 20ம் தேதி காவல் உதவி ஆய்வாளர் சங்கர், சக காவலர்களுடன் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை சங்கர் தடுக்க முயன்றபோது, அவர்கள் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பினர். புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரவுடி சூர்யா, அவரது கூட்டாளிகள் கௌதம், அஜித் ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

பின்னர் கௌதம், அஜித் ஆகிய இருவரையும் தனிப்படையினர் கைது செய்த நிலையில், அயனாவரத்தில் சூர்யா பதுங்கி இருந்தது தெரியவந்தது. நிகழ்விடம் சென்ற காவல்துறையினர், சூர்யாவை கைது செய்ய முயன்றபோது, தலைமைக்காவலர் சரவணக்குமார், காவலர் அமானுதீன் ஆகிய இருவரையும் சூர்யா அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : இருளில் ஒளியேற்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் அந்த அறிவிப்பு…ஐ.டி. ஊழியர்கள் உற்சாகம்…

தப்பி ஓட முயற்சித்த ரவுடி சூர்யாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சூர்யாவின் காலில் குண்டு பாய்ந்தது. இதன்மூலம் ரவுடி சூர்யாவை கைது செய்த கைது செய்த காவல்துறையினர், சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமத்தித்தனர். காயமடைந்த காவலர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் 2 ரவுடிகள் மீதும், திருச்சியில் 2 ரவுடிகள் மீதும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் சென்னையிலும் தற்போது ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். சென்னையில் கைதான ரவுடி சூர்யா மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.